6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்

பஞ்சபூதம் என்று நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவையை குறிப்பிடுகிறோம். இவைகளைப் போலவே நம்முள் இயங்கும் சுவைக்கும் நாக்கு, நுகரும் மூக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், உணரும் சருமம் போன்றவைகளை பஞ்சேந்திரியங்கள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் பஞ்சேந்திரியங்களும் அவற்றைச் சுற்றி இருக்கும் பஞ்சபூதங்களுடன் இயைந்து செயல்படுகின்றன. நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களும் இவற்றின் விளைவுகளே என்பதும் மறுக்க முடியாத உண்மை. பஞ்சேந்திரியம், பஞ்சபூதம் என்று ஆன்மீகச் சொற்ப்பொழிவுகளில் பரவலாகப் பயன்படுத்தபடும் சொற்கள்(கணனி) தொழில்நுட்பப் பகுதியில் ஏன் இடம்பெற்றுள்ளது என்று நீங்கள் குழம்பிப்போயிருந்தால் வியப்புஇல்லை .
இந்நாள் வரை கணனியம் (Computing.. not necessarily directly refer to computer) சார்ந்த எல்லாச் செயல்பாடுகள் நடைபெறும் டிஜிட்டல் உலகும், நாம் சுவாசிக்கும் (அதாவது பஞ்சேந்திரியங்களுடன் உறவாடும்) “நிஜ” உலகும் தனிதனியே இயங்குகின்றன. டிஜிட்டல் முறையில் தகவல்களை (கணனி)திரையிலும், அன்றாட வாழ்வில் காகிதங்களிலும், நாம் பார்க்கும் காட்சிகளிலும், படிக்கும் புத்தகங்களிலும், ஸ்பரிசிக்கும் பொருட்களிலும் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இவ்விரு உலகிற்கும் இடைவெளி நாளுக்கு நாள் குறைந்துகொண்டு தான் வருகிறது. Pocket PC / Blackberry / iPhone போன்றவை தற்போதைய உதாரணங்கள்.
இவ்விரு உலகின் இடைவெளியை இன்னும் குறுகச்செய்கிறது பிரணவ் மிஸ்திரியின் ஆறாம்-அறிவு தொழில்நுட்பம் (6th sense Technology). மனிதன் என்றைக்குமே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்வது மட்டும் அல்லாமல், இந்த உணர்வின் அடிப்படையில் சில முடிவுகளையும் எடுக்கிறான். எந்நேரமும் கணனி முன்னால் இருந்தால் நமக்கே உரிய உணரும் திறனை மெல்ல மெல்ல இழக்க நேரிடுகிறது. கணனியை விட்டு காலார நடந்து வரலாம் என்று பூங்காவிற்குப் போனால், அடடா எவ்வளவு ரம்யமான காட்சி, டிஜிடல் கேமராவில் பதிவு செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிய கணமே, அதே காட்சியை உணர்ந்து ரசிப்பதை விடுத்து டிஜிட்டல் உலகில் நுழைந்துவிடுகிறான். ஆனால் அதே காட்சியை பாரதிராஜா மாதிரி கட்டம் கட்டி, கைகளை சொடுக்கினாலே படம் எடுக்கலாம் (கேமராவை வெளியே எடுக்காமல்) என்பது இந்த 6th sense technology யின் சிறிய உதாரணமே. Continue reading “6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்”

உள்ளங்கையில் உலகம் – கைப்பேசியில் இணையம்

தொழில்நுட்பம் வளர வளர, நம் “தேவை”களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் “வசதி உள்ளவர்கள்” வாங்கும் பொருட்களாக இல்லாமல், ” அத்யாவசியம்” என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் ‘நாம் வாழும் இந்த’ காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் – கைப்பேசியும் இல்லாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்டால், நாம் அதாவது தனிநபரான நீங்களும் நானும் அந்த வட்டத்துக்குள் இல்லை என்ற எண்ணம் தான் எழுகிறது.
10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் Necessary Evil என்று சொல்லவது இணையத்தொடர்புக்கு மிகச்சரியாக பொருந்தும். தகவல் பரிமாற்ற துறையில் இருப்பவர்கள் இதன் வீர்யத்தை நன்கு அறிவார்கள். இது ஒரு புறம் இருக்க, இணையத்தொடர்பை நிறுவுவது முன்பை விட இன்று மலிவாகத் தான் உள்ளது. நாளுக்கு நாள் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணமாக்கூட இருக்கலாம்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களில் கணனியும் கைப்பேசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒன்று இல்லை என்றாலும், பல அலுவல்கள் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். இம்மாதிரி நேரங்களில் தான் கைப்பேசியில் இணையதளங்களை பார்வையிடுவதைக் குறித்து பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது நடைமுறைக்கு சரிவருமா? அப்படியானால் ‘என் கைப்பேசியில் இதை எவ்வாறு பயன்பாட்டு நிலையில் வைப்பது” போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் இப்பதிவின் நோக்கம்.
கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நாம் ISP என்று சொல்லப்படும் Internet Service Provider களை கண்டறிந்து சந்தா விவரங்களை தெரிந்துகொள்வோம். உதா:- DataOne, BSNL, Sify போன்றவை. பிறகு இவற்றில் நமக்கு உகந்ததை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட ISP அலுவலகத்தில் விண்ணப்பத்தை குடுத்து, சந்தா தொகையையும் கட்டிவிட்டால், சில தினங்களில் கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, “என்னிடம் Wireless Modem உள்ளது. இதை பயன்படுத்திதான் நான் மடிகணனியில் இணையத்தொடர்பு ஏற்படுத்துகிறேன். ஆகவே, இதே wireless modem த்தை பயன்படுத்தி என் கைப்பேசியிலிருது இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா?” என்றால் கண்டிப்பாக முடியாது. Modem தான் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் மூலாதாரம் என்றாலும், கணனி வேறு, கைப்பேசி வேறு. Chalk peice பயன்படுத்தி Slate இல் எழுதலாம், நோட்டுப்புத்தகத்தில் எழுத முடியுமா? நோட்டுபுத்தகத்தில் எழுத பேனா / பென்சில் தான் உகந்தது. கணனியில் பயன்படுத்தும் இணையத்திற்கும், கைப்பேசியில் பயன்படுத்தும் இணையத்திற்கும் இது தான் வித்தியாசம்.
அப்படி என்றால், கைப்பேசியில் எவ்வாறு இணையத்தொடர்பை ஏற்படுத்துவது?. இதற்கான குறிப்புகள் சில.

  1. Mobile phone model : –
    நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில, இணைய பயன்பாட்டுக்கான சாதனங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுக்கள். உதா:- கைப்பேசியில் உலாவி / கோப்புகளை படிக்கவும் மற்றும் தரவிறக்கம் – வலையேற்றுவதற்கான வசதி போன்றவை.
  2. Mobile Service Provider :-
    நீங்கள் சந்தாதாரராக இருக்கும் Mobile Service Provider (Airtel, Hutch, vodafone) இடம், கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதா என்று விவரமாக கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், நேரில் போய் விசாரிப்பது நல்லது. பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
  3. சந்தா விவரங்கள்
    அடுத்தது, இணையத்தொடர்புக்கான தனிப்பட்ட சந்தா விவரங்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். சில Mobile Service providers, மாதம்/ வாரம் / தினத்திற்கென்று ஒரு தொகை வைத்திருப்பார்கள். நீங்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். வேறு சில Mobile Service Providers, பயன்பாட்டுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதும் போன்ற திட்டங்களையும் வைத்திருப்பார்கள். ஆகவே அவசரப்படாமல், நிதானமாக எல்லாவற்றையும் கேட்டு, புரிந்துக கொண்டு உங்களுக்கு சரியாக தோன்றும் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
  4. Data Download Charges :-
    கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்த மாத சந்தா என்ற தொகையை கட்டினாலும், இணையப்பயன்பாட்டில் இருக்கும் பொழுது, உலாவியில் தரவிறக்கப்படும் பக்கங்களின் அளவை சார்ந்திருக்கும் தொகையை தான் Data Download charges என்று சொல்வார்கள்.

    உதா:- உங்கள் கைப்பேசியில் இணையத்தொடர்புக்கான மாதச்சந்தா 500/- என்று வைத்துக்கொள்வோம். இணையத்தொடர்பு தான் கிடைத்துவிட்டதே! சும்மா இருக்கும் நேரம் எல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறேன், வலைத்தளங்களை பார்வையிடுகிறேன் என்று தினம் 2-3 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 மணி நேரத்தில், நீங்கள் பார்வையிட்டிருக்கும் பக்கங்களின் அளவை பொறுத்து Data Download Charges என்றொரு தொகை கணக்கிடப்படும். மாத கடைசியில் இணயத்தொடர்பு சந்தா 500/ மற்றும் Data Download Chareges 1000/- என்றும் பில் வரும்.

    ஆகவே நீங்கள் தேர்வு செய்திருக்கும் Mobile Service provider இடம், அவர்களின் திட்டத்தில் data download charges உண்டா? அப்படி உண்டு என்றால் அதன் விவரங்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் இணையத்திலிருந்து பாட்டு / படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த Data Download Charges கூரையை தொடும் அளவிற்கு இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

இவை அனைத்தையும் மனதில் பதியவைத்து உங்கள் Mobile Service Provider ஐ அணுகி விவரங்கள் சேகரித்து நன்கு ஆராய்ந்த பிறகே கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்பதையே பரிந்துரைக்கிறோம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியும். “கைப்பேசியில் இணையம் தேவை தானா?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும். இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிட துவங்குங்கள், விடை தானாகவே கிடைத்துவிடும்.
— தீபா கோவிந்த்

Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.

தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே “அத்தியாவசியம்” என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி.
Microsoft Security Essentials
Genuine Microsoft Operating system, அதாவது மைக்கரோஸாப்ட்டின் சான்றிதழ் பெற்ற Operating System ( xp, Vista, Windows 7) போன்றவற்றை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், மைக்கரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் இந்த பாதுக்காப்பு நிரலை கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம். இதை எப்படி நிறுவ வேண்டும், கோப்புகளை எப்படி சோதிக்க வேண்டும் என்பதை குறும்படம் மூலம் நன்கு விளக்கியுள்ளார்கள்.
AV Comparitives என்ற நிறுவனம், நச்சு நிரல்களிலிருந்து கணனியை பாதுகாக்கப் பயன்படுத்தும் நிரல்களை பரிசோதித்து பார்ப்பதில் தேர்ச்சி பெற்றது. இவர்களின் ஆய்வுப்படி, சோதனையில் பங்குபெற்ற 10 நிரல்களில், மைக்கரோசாப்ட்டின் இந்த பாதுகாப்பு நிரலி, எல்லா விதமான சவால்களையும் கடந்த மூன்று நிரல்களில் ஒன்றாகும்.
கணனியில் நச்சு நிரல் பாதுகாப்பு நிரலை நிறுவவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு (ஒன்றுக்கும் மேற்பட்ட) நச்சு-நிரல் நிரலியை நிறுவக்கூடாது. ஏனென்றால், ஒரு நிரலை சார்ந்த கோப்புகளை இன்னொரு நிரல் நச்சு-பாதித்த கோப்பு என்று தவறாக எண்ணும் சாத்தியம் உண்டு.
ஆகவே, நீங்கள் தற்போது பயன்படுத்தும் நச்சு-நிரல் பாதுகாப்பு நிரலியிலிருந்து மாறுபட்ட நிரலை பயன்படுத்த எண்ணினால், முதலாவதை நீக்கிவிட்டு, புதியதை நிறுவுங்கள்.
Windows FireWall protection


நம் வீடுகளில் கதவு முக்கியமான பங்கு வகிக்கிறது. நமக்கு விருப்பம் உள்ளவர்களை கதவை கடந்துவர அனுமதிக்கிறோம். ஆனாலும், வீட்டை சுற்றி (compund wall) சுவர் / முள் வேலி எழுப்புகிறோம். ஏனென்றால், விருப்பமற்ற/ தேவை இல்லை என்று கருதுவதை எல்லாம், வீட்டு வளாகத்துக்குள் வராமல் தடுப்பது தான் இந்த சுவரின் நோக்கம். இந்த வேலையைத்தான் கணனியில் Firewall செய்கிறது.
Anti-Virus நிரல்கள் (நாம் Scan Now அன்று சொல்லிய பிறகு) நச்சு நிரல் பாதித்த கோப்புகளை கண்டுபிடித்து, அவைகளை நீக்குமாறு நமக்கு பரிந்துரைக்கிறது. ஆனால் Firewall, நச்சு நிரல்களை, கணனியில் தரவிறக்கம் ஆகும் முன்னே நமக்கு எச்சரிக்கை விடுகிறது. ஆகவே தான் இதை வீட்டை சுற்றியிருக்கும் மதிர்ச்சுவருடன் ஒப்பிடுகிறோம்.
உங்கள் கணனியில் உள்ள Start -> Control Panel -> Security Settings, இல் மைக்கரோஸாப்ட் அளித்துள்ள Firewall ளிடம் கோப்புகளை எப்படி கையாளவேண்டும் என்பதை குறிப்பிடலாம். மேற்படி விவரங்களை – Windows XP பயன்படுத்துபவர்கள் / Windows Vista பயன்படுத்துபவர்கள் இங்கே விளக்கப்படத்துடன் பார்க்கலாம்.
Windows Updates :-


சில சமயங்களில் கணனியின் வலது மூலையில், மஞ்சள் நிறத்தில் ஒரு சிறிய பெட்டி வந்து போகும், “Ready to install updates” என்று. சிலர் இதை தொந்தரவாக நினைத்து, “Update Later” என்று சொல்லி, பிறகு மறந்து விடுவார்கள். அந்த நிமிடம் இது தொந்தரவாக தெரிந்தாலும், கணனி பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. முன்-வாசல், பின்-வாசல், மாடிக்கு போகும் வழி, காம்பவுண்ட் சுவரில் இருக்கும் இரும்புக்கதவு என்பதை எல்லாம் சரிபார்த்து பூட்டுவது தொந்தரவாக இருக்கும், ஆகவே இதையெல்லாம் திறந்தே வைக்கிறேன், என்று சொல்வதற்கு சமமாகும் . Windows Updates ஐ புறக்கணித்துவிட்டு, என்னதான் உயர்தர நச்சு-நிரல் பாதுகாப்பு நிரல்களை நிறுவினாலும், சில சதவிகிதம் தான் பாதுகாப்பு பெற முடியும். முழுமையான பாதுகாப்பு பெற, Windows updates ஐ சரியாக கண்காணித்து புதுப்பிப்பது சிறந்தது.
உலாவியுடன் ஒட்டி செயல்படும் தரமான சொருகி-நிரல்களையும் (plug-in) புதுப்பிக்க வேண்டும்


Adobe Acrobat Reader / Adobe Flash player போன்று உலாவியுடன் ஒட்டி செயல்படும் இந்த சொருகி-நிரல்கள் இணைய பயன்பாட்டில் தவிர்க்க முடியாதது. Adobe நிறுவனம் புதிது புதிதாய் வரும் நச்சு-நிரகளிலிருந்து இதன் சொருகி-நிரகளை பாதுகாக்க, வேண்டிய முறைகளை மேம்படுத்தி, நிரல்களை புதுப்பிக்கச் சொல்லி தகவல் விடும். இம்மாதிரி தரமான சொருகி-நிரல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதும், நச்சு நிரல்களை தரவிறக்கம் ஆகாமல் தவிர்க்க முடியும்.
எச்சரிக்கையுடன் செயல்படுவது


“சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை” என்பது போல், அறிமுகம் இல்லாத தளங்களிலிருந்து / நபர்களிடமிருந்து வரும் சுட்டிகளை / கோப்புகளை தரவிறக்கம் செய்யாதீர்கள். இவைகளை தரவிறக்கம் செய்தே ஆகவேண்டும் என்றால், தனித்தனியாக Anti Virus மூலம் சோதித்து பார்க்கவும். இன்னும் அதிகப்படியாக சோதிக்க வேண்டும் என்றால், Virus Total போன்ற தளத்தில் குறிப்பிட்ட கோப்பை வலையேற்றி, சோதனைச் செய்யவும். இந்த தளம் பல நச்சு-நிரல் பாதுகாப்பு தளங்களுடன் ஒத்து செயல்படுவதால், குறிப்பிட்ட கோப்பின் நம்பகத்தன்மையை விவரமாக பரிசோதிக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும்போது, நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போடச் சொல்லி வலியுறுத்துவார்கள். பலர் கைப்படும் காரணத்தினால், கையாளும் முறை வேறுபடும். இதனால், குறைந்தது ஒரு வருட காலமாவது, அந்த புத்தகம், பயன்பாட்டு நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் பள்ளி மற்றும் பெற்றோரின் எண்ணம். அதே மாதிரி, கணனியிலும், கையாளும் முறை மாறுபடும். இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்வது, USB-Stick க்கில் கோப்புகளை ஏற்றுவது, பகிர்ந்துகொள்வது, குடும்பத்தில் எல்லோரும் ஒரே கணினியை பயன்படுத்துவது போன்றவை (பலர்) கையாளும் முறைகளாகும். இக்காரணத்தினால், கணனியில் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வது சாலச்சிறந்தது. Spyware, Malware, Adware போன்றவை எம்மாதிரியான விபரீத விளைவுகளைத் தரும் என்று முன் பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இம்மாதிரி பாதுகாப்பு முறைகளை / நிரல்களை பயன்படுத்துவதற்கு அதிகப்படியாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை என்பது உபரி தகவல்.
— தீபா கோவிந்த்

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், சில விளக்கங்கள்

“மாங்காய்க்குப் புளிப்பே இல்லை, கீரையில் மண் வாடை வருகிறது, மாம்பழத்தில் மருந்தின் சுவை உள்ளது” என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவற்றில் சிலதை நாமும் அனுபவித்திருக்கிறோம். கடைக்காரரிடம் காரணம் கேட்டால், “விவசாயம் செய்பவர்கள் கண்ட கண்ட மருந்தைத் தெளிக்கிறார்கள், இயற்கை உரம் பயன்படுத்துவதில்லை, அதனால் தான் பழைய சுவை ஏதும் காய் மற்றும் பழங்களுக்கு இருப்பதில்லை” என்று சொல்வார்கள்.
சிந்தித்துப் பார்த்தால் அவர் சொல்வதும் ஓரளவு உண்மை தான். பயிரின் உற்பத்தித் திறனைப் பெருக்க, இரசாயனக் கலவைகளை, பரிந்துரைத்த அளவுக்கும் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். மிகுதியாய் இருக்கும் இந்த இரசாயனக்கூட்டு (அல்லது பூச்சிகளை நாசம் செய்யப் பயன்படுத்தும் உயிர்க்கொல்லி மருந்து), பயிர்கள் மீது தங்கிவிடுகிறது. மேலும் காய்–பழம் போன்றவற்றில் ஊடுருவுகிறது. சந்தைகளில் இவற்றை வாங்கி உண்ணும் பொழுது சுவை குறைந்திருப்பதை உணர்கிறோம்.
உற்பத்தித் திறனைப் பெருக்க கண்-மண் தெரியாமல் மருந்தைப் பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம், அடிமடியில் கை வைப்பது போல், விஞ்ஞானிகள் பயிரின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படுத்துவதில் மும்மரமாகச் செயற்படுகிறார்கள். அதாவது, பூச்சிகள் வருவதால் தானே பூச்சி-மருந்தைப் பயன்படுத்துகிறோம். பயிரே பூச்சியைக் கொல்லும் மருந்தை உற்பத்தி செய்வதாக இருந்தால், மருந்து தேவை இல்லையே. அப்படியானால், பூச்சி-மருந்து பயன்படுத்துவது குறையும், உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களின் வாதம்.
என்ன, குழப்பமாக உள்ளதா? பூச்சியைக் கொல்வதற்கு சில குறிப்பிட்ட இரசாயனங்கள் தேவை. இவை பொதுவாக தாவரங்களில் இருப்பதில்லை, அப்படியானால் இல்லாத ஒன்றை எப்படி பயிரில் உற்பத்தி செய்விப்பது? இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தால் தயாராகும் GMFood (Genitically Modified food) என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள்.
Gene அல்லது மரபணு என்றால் என்ன?
ஒவ்வொரு உயிரியின் தன்மையை அதன் மரபணு (DNA) தான் நிர்ணயிக்கிறது. உதாரணமாக, நம்மில் கருவிழி கறுப்பா – பழுப்பு நிறமா, தோல் மிருதுவாக இருப்பது – தடிமனாக இருப்பது போல, தென்னை மரங்களில் மிக உயரமாகவும் குள்ளமாகவும் வளரும் வகைளை சாதரண மக்கள் “ஒரே இனத்தைச் சேர்ந்தாலும் தனிப்பட்ட தன்மையைக் கொண்டது” என்று சொல்வார்கள். விஞ்ஞான ரீதியாக இவற்றை ” மரபணுவில் உள்ள தனித்தன்மைகள் தான் குட்டை – நெட்டை / நிறங்களில் மாற்றமாக வெள்ளிப்படுகிறது” என்று சொல்லப்படுகிறது.
Genitically Modified / மரபணு மாற்றப்பட்ட .. என்றால் என்ன?
உயரத்தில் இருக்கும் மாங்கனியைப் பறிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று கிராமத்துத் தோப்பில் மாங்காய் திருடிச் சாப்பிட்டவர்கள் சொல்வார்கள். ஆனால், கைக்கெட்டும் தூரத்திலேயே பழுத்துத் தொங்கினால், பார்த்துவிட்டு சும்மா இருப்பீர்களா? உயரத்தில் காய்க்கும் மரங்களின் சில நுண்ணிய மரபணு மாற்றங்கள் செய்தால், அடுத்த முறை காய்க்கும் பொழுது நிலத்துக்கு மிக அருகாமையில் காய்க்கும். திருவண்ணாமலை – பாண்டிச்சேரி செல்லும் பாதையில் இருக்கும் மாந்தோப்பில் நீங்கள் படுத்துக்கொண்டேக்கூட காய் பறிக்கலாம். இது ஒரே இனத்தைச் சேர்ந்தவற்றில் ஏற்படுத்திய மரபணு மாற்றம்.
எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் மரபணு மாற்றம் செய்ய முடியுமா?
Theoritical ஆக முடியும் Practical ஆக யோசித்தால் முடியாது. அதீத கற்பனையுடன் சொல்லலாம் என்றால், நாயின் மரபணுவை முயலுக்குள் இணைத்தால், முயல் நாய் மாதிரி குரைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தாவரங்களின் மரபணுவை மாட்டுக்குள் இணைத்தால், கொம்பில் பூ பூக்கும் என்று எதிர்பார்க்கலாம். நாம் எதிர்ப்பார்க்காத இன்னும் பல விளைவுகளும் இது தரக்கூடும் என்பது எழுதப்படாத சாசனம். (முயலுக்கு கோரைப்பல் வரலாம், பால் பச்சை நிறத்தில் இருக்கலாம்)
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்றால் என்ன?
சில பயிர்களை சில கிருமிகள் தான் தாக்கும். இக்கிருமிகளை நாசம் செய்ய சில தனிப்பட்ட இரசாயனம் மிக சிறிய அளவிலேயே போதுமானது. Bacteria என்று சொல்லப்படும் சில நுண்ணுயிர் கிருமிகளில் தாமாகவே இம்மாதிரி இரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. மரபணு மாற்றுதல் மூலம், Bacteria விலிருந்து இரசாயன உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் மரபணுவின் பகுதியை வெட்டி எடுத்து, பயிரின் மரபணுவுடன் இணைக்க முடியும். இம்மாதிரி மரபணு மாற்றபட்ட பயிர்களின் விதைகளுக்கு பூச்சிக்கொல்லி இரசாயனத்தை பயிரே உற்பத்தி செய்யும் திறன் வந்துவிடும்
அப்படியானால் பூச்சி மருந்து தேவையில்லை என்று எண்ணலாமா ?
இது இக்கட்டான கேள்வி. ஆம் இல்லை என்று பதில் சொல்ல முடியாது. Theoritical ஆகவும், சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் (Controlled experiments) மூலமாகவும், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால், மண்ணின் தன்மையுடன், நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சாப்பிடலாமா ?
இம்மாதிரிப் பயிர்களிலிருந்து வரும் தானியங்களிலும் நுண்ணுயிரின் மரபணுவின் அம்சம் சொற்பமாகவே என்றாலும் உள்ளது என்பது நிஜம். இந்த நுண்ணுயிரின் மரபணு இதைச் சாப்பிடுபவரின் (மனிதன், மிருகம், பறவைகள்) மரபணுவுடன் எவ்வாறு ஒத்துப்போகும் என்றும் சொல்ல இயலவில்லை. ஒவ்வாமையினால் (Allergic reaction) மருத்துவக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வயலில் மருந்தைத் தெளித்ததாலும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் சந்தையிலிருந்து வாங்கிய பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு, பல முறை சுத்தமான நீரில் கழுவியபிறகு பயன்படுத்தவேண்டும் என்பதை நாம் அறிவோம். Topical Application என்று சொல்லப்படும் “ஒரு பொருளின் மேலே புரட்டுவது / பூசுவது / தெளிப்பது” போன்றவற்றுக்கு சுத்தமான நீரில் கழுவுவது ஓரளவு மருந்தின் தன்மையை நம் உடலுக்குள் செல்வதைக் குறைக்கிறது. நுண்ணுயிரின் மரபணு கலக்கப்பட்ட பயிர்களில் இதை எவ்வாறு தவிர்ப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மரபணு மாற்றப்பட்ட (உணவு) பயிர்களை எவ்வாறு கண்டறிவது?
சுருக்கமாகச் சொன்னால், “முடியாது”. சாதாரண கத்தரிக்காயும், மரபணு மாற்றப்பட முறையில் விளைந்த கத்திரிக்காயையும் பார்வையினால் கண்டறியமுடியாது. சுவையில் வித்தியாசம் உள்ளதா என்று இரண்டையும் தனித்தனியாக சமைத்துச் சாப்பிட்டவர்கள்தான் சொல்லவேண்டும். அதனால், இம்மாதிரி பயிர்களுக்கு முத்திரையிட்டு விநியோகிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பலர் கோரிக்கை அனுப்பியவண்ணம் உள்ளார்கள்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை சாதாரண விவசாய நிலங்களில் பயிரிடலாமா?
இந்த ஆராய்ச்சியின் கருப்பொருளே, இவற்றை சாதாரண விவசாய நிலங்களில் பயிரிடவேண்டும் என்பதுதான். செய்யலாம் என்று ஒரு மக்கள் கூட்டம் சொன்னாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்படி, ஒரு முறை மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்துப் பயிரிட்டால், அந்நிலத்தில் சாதாரண விதைகள் விளையாது என்றும், ஒவ்வொரு முறையும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். இது தொடர்பாக இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிடுவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுமா?
பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.
ஒவ்வொரு மனிதனும் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பது போல், நம் நாடும் மற்றவர்களை அண்டி இருக்கக்கூடாது, என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இம்மாதிரி ஆராய்ச்சிகளுக்கு தம் நாட்டில் வழியும் வசதியும் வரும்வரை, மரபுவழி விவசாயம் செய்வதே மேல் என்பது என் தனிப்பட்ட கருத்து
-தீபா கோவிந்த்

சந்தைக்குப் போகணும் – கார்டு குடு

சந்தைக்குப் போகணும், காசு குடு; ஆத்தா வைய்யும்”, என்று பறட்டையிடம் கெஞ்சும் சப்பாணியின் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் என்னவெல்லாம் வாங்கவேண்டும் என்று வாரம் முழுவதும் பட்டியலிட்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, காசைக் கடைக்காரரிடம் கைமாறும் முன்னே, நூறு முறை எச்சில் தொட்டு எண்ணிய பிறகே கொடுப்பது என்று இருந்தது அந்தக் காலம்.
காலச் சக்கிரம் சுழல, பணப் புழக்கமும், அதன் பரிமாணங்களும் மாறின. இன்று வர்த்தகங்களின் பெரும் பகுதி Card Transaction இல் நடைபெறுகிறது. சொல்லப்போனால், “மால்” என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் கடைகளிலும் – பெட்ரோல் பங்கிலும் தான் Card Transactions அதிகப்படியாக நடக்கிறது. மிகமிகத் தேவையான அளவு காசை வைத்துக்கொண்டு மற்றதை இம்மாதிரி Card Transaction செய்வது வசதி மட்டுமில்லை, பாதுகாப்பானதும் கூட என்று சொல்லலாம். கடன் அட்டைப் பாதுகாப்பு – சில ஆலோசனைகள் என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.
‘மால்’கள் வந்த புதிதில், போக்குவரத்து நெரிசல்களையும் கூடப் பொருட்படுத்தாமல் எல்லோரும் வந்தவண்ணம் இருந்தார்கள். இவைகளின் புதுமை குறைந்த பிறகு ‘மாலுக்கா?” என்று சலிப்புத் தட்டிவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்வும், வீட்டில் இருந்தபடியே “ஷாப்பிங்க்” செய்யக்கூடிய வசதியை இணையம் நமக்கு அளித்ததும், ‘மால்’-வரவுகள் குறைய முக்கிய காரணங்கள்.
Online Shopping என்று சொல்லப்படும் இணையச் சந்தைத் தளங்கள், இருந்த இடத்திலிருந்தே பொருட்களைக் காணவும், வாங்குவதற்கும் வசதியாகச் செயற்படுகிறது. கூட்ட நெரிசல்களையும், போய்வரும் எரிபொருட் செலவையும், உபரியாய் வரும் ஹோட்டல், சினிமா, சாப்பாடு, பார்க்கிங் செலவுகளையும் கணிசமாய்க் குறைக்கிறது. ஆனால், இதிலும் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட்டால் இந்த Online Shopping முறையை உங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்தலாம்.

  1. தகவல் திருட்டு :
  2. உங்கள் கணனியில் Anti-Virus/Anti-Spy போன்ற நிரல்கள் நிறுவப்படவில்லை என்றால், எக்காரணம் கொண்டும் இணையச் சந்தைத் தளங்களில் பயணர் கணக்கு உருவாக்குவதைத் தவிர்க்கவும். பல தளங்களில் பயணர் கணக்கு இல்லாமலே உலா வரலாம். பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டுமே பயணர் கணக்கு அவசியம் என்று அறிவித்திருப்பார்கள். (நச்சு நிரல் பாதுகாப்பு என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.)

  3. Pop Up blocker:
  4. கிட்டதட்ட எல்லாச் சந்தைத் தளங்களிலும் விளம்பரங்கள் தனிப்பட்ட சாளரங்களாக(Pop up windows) தாமாகவே திறந்து கொள்ளும். இதைத் தடுக்க உங்கள் இணைய உலாவியில் Pop Up Blocker ஐ செயற்பாட்டு நிலையில் வைக்கவும். இம்மாதிரி வரும் சாளரங்களில் சொடுக்குவதும், மின் அஞ்சல் முகவரிகளைக் கொடுப்பதையும் தவிர்க்கவும்.உங்கள் உலாவியைப் பொறுத்து, Pop up blocker ஐ செயல்பாட்டு நிலைக்குக் கொண்டுவரும் முறை மாறுபடும்.
    i. Fire Fox பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
    ii. Internet Explorer பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
    iii. Safari பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
    iv. Opera பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க

  5. HTTPS தளம் :
  6. வர்த்தகத் தளங்களில் பணம் புழங்குவதால், HTTPS என்ற முகவரியுடன் தான் தள முகவரி தொடங்கும். இப்படி இருந்தால், இத்தளத்தில் வர்த்தகம் செய்யப் பாதுகாப்பானது என்று குறிக்கும். HTTP என்று மட்டும் இருந்தால், எக்காரணம் கொண்டும் உங்கள் Credit Card / வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்காதீர்கள். (அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்)

  7. விளம்பரங்ளில் உள்ள விலையும், நீங்கள் கட்ட வேண்டிய தொகையும் மாறுபடும். : –
  8. கடைக்குச் சென்று பொருள் வாங்கும்பொழுது, பொருள் மேல் போட்டிருக்கும் விலை (MRP) ஐக் கவனிப்பது வழக்கம். சில பொருட்களுக்கு, VAT / Service Tax போன்ற வரியையும் கூட்டிச்சேர்த்துச் சொல்வார்கள் (குறைந்த பட்சம் 5ரூ), நாமும் அந்தத் தொகையைச் செலுத்திப் பொருளை வாங்குவோம். ஆனால், இணையத்தில் இயங்கும் சந்தைத் தளங்களில், பொருளுக்கென்று ஒரு விலை , பிறகு அதை உங்கள் முவரிக்கு அனுப்பி வைக்க இன்னொரு தொகை (Shipping – Handling charges) என அறவிடப்படும். சில தளங்களில் பொருளின் எடைக்கு ஏற்ப Shipping charges மாறுபடும். இவை அனைத்தையும் சரிவர ஆராய்ச்சி செய்த பிறகு வாங்குவது தான் விவேகம். அத்துடன், பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் முறையையும் (Return – Refund Policy) அறிந்து கொள்ளுங்கள்.

  9. சுய கட்டுப்பாடு:-
  10. விரல் நுனியில் எல்லாம் கிடைக்கிறது என்று, தளத்தில் போன மாத்திரத்தில் வாங்குவது முட்டாள்தனம். சிறிய தொகைக்கு ஒரு பொருளை வாங்கி, அது சரியாக உங்கள் விலாசத்திற்கு சொன்ன திகதியில், எந்தக் குறைபாடும் இல்லாமல் வந்து சேர்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். சந்தைத் தளங்களில் உங்கள் Credit Card / Debit Card விவரங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது என்பதால், பொதுக் கணனிகளில் அதாவது Cyber Cafe போன்று பலர் பயன்படுத்தும் கணனிகளில் ஷாப்பிங்க் செய்வதைத் தவிர்க்கவும். இம்மாதிரி கணனிகளில் தனிப்பட்ட நிரல்கள் நிறுவப்பட்டிருக்கும். இவை சந்தைத் தளங்களில் நீங்கள் Credit Card மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை வழங்கும் பொழுது, உங்கள் கவனம் இல்லாமலே பிரதி எடுத்துக்கொள்ளும். இம்மாதிரி பிரதி எடுக்கப்பட்ட தகவல்களை யார் எப்படி பயன்படுத்தினாலும் நஷ்டம் உங்களுக்குத் தான்.

    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோழிக்குஞ்சு வந்ததுன்னு,
    யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு, பூனைக்குஞ்சு சொன்னதுண்டு!
    கதையிலதானே, இப்போ, காணுது பூமி.
    இது மட்டும்தானா, இன்னும், இருக்குது சாமி.

    என்று சப்பாணியும் மயிலும் பாடிக்கோண்டே சந்தைக்குப் போனார்கள். இன்று இதே பாடலை இருந்த இடத்திலிருந்து கேட்டுக்கொண்டே நாம் இணையதள சந்தைகளில் உலா வருகிறோம். சந்தைக்குச் செல்லும் பெண்கள் சுருக்குப்பையை அடிக்கடி தொட்டுப்பார்ப்பது போல், தகவல் திருட்டுக்கு சாத்தியங்கள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். இணையதளச் சந்தைகளில் கொடுக்கல் வாங்கல்களில் உள்ள நுணுக்கங்கள் பற்றியும், அடிப்படை எச்சரிக்கை முறைகளையும் நினைவில் வைத்துக்கொண்டால், ‘மால்’களில் AC- காற்று வாங்கி, சுற்றி வருவது போல், இங்கும் உல்லாசமாகச் சுற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை

இதயம்”, வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholesterol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, “இதயம் வெடித்து விடும்போல உள்ளதே” என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் “பத்திரமாக” இருக்க வேண்டிய இதயம், “உடலுக்கு வெளியே” உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம், பீகாரில், அரசாங்க மருத்துவமனையில், கூலி வேலை செய்யும் மாஜி-விபா தம்பதிக்கு, ஓர் அழகான ஆண் குழந்தை 26 Aug 09 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே (நெஞ்சுக்கு மேலே) இருந்தது . தட்டச்சு பிழை எதுவும் இல்லை, நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது.
இந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis – தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.
ஆனால், இந்த பீகார் – பாப்பாவுக்கு ஆயுள் கெட்டி. (இந்தப் பாப்பாவுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை). ஏதோ ஒரு குக்கிராமத்தில், அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் மருத்துவமனையில் பிறந்த இந்தச் சிசுவை அங்கே சிகிச்சை செய்ய முடியாது என்பதால், தில்லிக்குக் கொண்டு செல்லச் சொல்லிவிட்டார்கள். இயற்கையாகவே இந்தப் பாப்பாவின் இதயத்திற்குப் பாதுகாப்பு இல்லை (நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே அல்லவா இதயம் இருக்கிறது). சாதாரணத் துண்டின் பலத்தை நம்பி, 3 நாள் குழந்தையை சுற்றிக்கொண்டு, ரயிலில் unreserved compartment ல் தில்லியில் உள்ள AIIMS (All India Institute of Medical Science) க்கு வந்தார்கள்.
குழந்தையை பார்த்த AIIMS மருத்துவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. உடனே குழந்தையை isolation ward இல் வைத்து கண்காணிக்கத் தொடங்கினார்கள். மற்றப் பிள்ளைகளை விட இந்தக் குழந்தைக்கு infection வரும் சாத்தியம் அதிகம். X- Ray எடுத்துப் பார்த்ததில், இந்தப் பாப்பாவின் நெஞ்சுக்கூட்டில் இதயத்துக்கான இடமே இல்லை என்று காண்பித்தது. இதற்கு ஒரே வழி, அறுவைச் சிகிச்சை மூலம் நெஞ்சுக்கூட்டில் (இதயத்தின் இடத்தை ஆக்கிரமத்திருக்கும்) உறுப்புகளை ஒதுக்கி, இதயத்துக்கென தனி இடத்தை அமைக்கவேண்டும். பிற்பாடு, வெளியே தொங்கும் இதயத்தை இந்த இடத்தில் பொருத்த வேண்டும். இப்படிப் செய்யும் பொழுது மற்றத் தசைகளுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அழுத்தமும், பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யவேண்டும்.
இவை அனைத்தும் பிறந்து 10 நாட்களே ஆன – சில அங்குலங்கள் மட்டுமே வளர்ந்த குழந்தையின் உடலில் செய்யவேண்டும். பிள்ளையார் சுழியிலிருந்து – சுபம் வரை ஒரே சிக்கல்.
ஆனாலும் மனம் தளராமல், கைதேர்ந்த 13 மருத்துவர்கள் 4 மணி நேரம் இந்தக் குழந்தையின் ஒவ்வோர் அசைவயும் கண்காணித்து 5 Spet 09 இல் வெற்றிகரமாய் இந்த அறுவைச் சிகிச்சையை நடத்தினார்கள். இந்த சீக்குப்பிள்ளையை ரயிலின் unresrved compartment இல் எந்த வித ‘பாதுகாப்பும்’ இல்லாமல் கொண்டுவந்ததால், வயிற்றுப்போக்கும், infection உம் இருந்ததாம். அதனால், ரத்தம் மாற்று சிகிச்சையும் Blood Transfusion கூடவே நடைபெற்றது. இப்பொழுது பீகார்-பாப்பாவின் உடல் நிலையில் அறுவை சிகிச்சையின் வீரியம் குறைந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
திரு.பிஸ்வோய் & திரு. தேகா வின் குழு இக்குழந்தையைத் தவறாமல் கண்காணித்து வருகிறார்கள். சில மணி நேரங்கள் மட்டுமே வாழ வகைசெய்யும் இக்குறைபாட்டுடன், இந்த பிள்ளை 10 நாட்கள் வாழ்ந்தது முதல் அதிசயம் என்றும், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் தெரிவது இரண்டாவது அதிசயம் என்றும் கூறுகிறார்கள். பீகாரிலிருந்து தில்லி வருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த கிராமத்து மருத்துவரை மாஜியும் விபாவும் நன்றியுடன் நினைவுகூறுகிறார்கள்.
சாதாரண கூலி வேலை செய்யும் இந்தத் தம்பதிக்கு பீகாரிலிருந்து ரயில் ஏறும் பொழுது தெரியாது, இந்தப் பிள்ளை பிழைக்குமா பிழைக்காதா என்று. தக்க நேரத்தில் ஊக்கமும் பண உதவியும் செய்த கிராமத்து மருத்துவரும், மருத்துவ உதவிகளைச் செய்து வரும் AIIMS குழுவின் கூட்டு முயற்சியாலும், பீகார்-பாப்பா பிழைத்துத் தேறி வருகிறது. எல்லோரும் இந்தக் குழந்தையை அதிசயபாப்பா என்று சொல்கிறார்கள்.

தண்ணீர் தண்ணீர் !!

Water Water everywhere, but not a drop to drink ” (எல்லா இடத்திலும் நீர் ஆனால் குடிப்பதற்கில்லை ஒரு சொட்டு) என்று புகழ்பெற்ற கவிஞர் Samuel T Coleridge எழுதிய The Rime of the Ancient Mariner கவிதையில் வரும். சீற்றம் நிறைந்த கடலில் மாலுமியும் அவரது பணியாட்களும் நீண்ட காலம் பிராயணம் செய்கிறார்கள். கரை சேர்ந்த பொழுது தேக்கிவைத்த குடிநீர் எல்லாம் இப்பொழுது செலவாகிவிட்டது என்றும், சுற்றும் தண்ணீரால் (கடலால்) சூழ்ந்திருந்த போதிலும், தன் சகாக்களுக்கும் பணியாட்களுக்கும் தாகத்தை தீர்க்க ஒரு சொட்டு தண்ணீர் (குடிக்க தகுதியான நீர்) கூட கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்.
ஜென்ம விரோதியே தாகம் என்று சொல்லும் பொழுது, சற்றும் தயங்காமல் மோர் குடுக்கவேண்டும் என்ற மனம் கொண்டவர்கள் தான் நம்மில் பலரும். இப்படி விரோதத்ததை அகற்றி, தீங்கு செய்தவர் என்பதையும் மறந்து மனிதாபிமான அடிப்படையில் செயல் படும் நாம், நம் வருங்கால சந்ததியினர்களுக்கு நம்மையும் அறியாமல் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்கிறோம் என்று தெரியுமா? நம் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சேரவேண்டிய நிலத்தடி நீரை நாம் கபளீகரம் செய்வது மட்டுமல்லாமல், பொறுப்பில்லாமல் அவற்றை விரயம் செய்துகொண்டு இருக்கிறோம்.
பூமியில் 70% நீரால் நிரம்பி இருக்கிறது என்று சான்றுகள் சொல்கின்றன. நம் உடம்பில் 60% நீர், மீதி இருக்கும் 40% தான் ரத்தம், காற்று, மாமிசம் போன்றவைகளுக்கு. ரிதம் திரைப்படப் பாடலில் வருவது போல் தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர் கரையில் முடிக்கிறோம், ஒவ்வொரு கட்டத்தில் நம் வாழ்வில் தண்ணீர் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதை மனதளவில் ஒப்புக்கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் 40% கும் மேல் தண்ணீரை விரயம் செய்கிறோம் என்பதை உணர்வதில்லை.
தொடர்ந்து விவசாய நிலங்களில் அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்ததாலும், மரங்களை வளர்க்காமல், இருக்கும் வனங்களை குடியிருப்புகளாக மாற்றிவந்ததின் காரணமாகவும், நிலத்தடி நீ ரின் மட்டம் (Ground water table) கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளன. 1980′ s இல் சென்னை புறநகர் பகுதிகளில் 8 அடி குழித்தாலே நீர் ஊற்றெடுக்கும். ஆனால் இப்பொழுதோ, 15 அடி தோண்டி, பாறைகளை மருந்து வைத்து உடைத்தாலும் நீர் ஊற்றெடுப்பதில்லை. ஏரி, குளம் எல்லாம் வற்றிக்கொண்டே வருகிறதாம். நிலத்தடி நீரின் மட்டம் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம், மழை நீரின் பெரும் அளவு நிலத்தை வந்தடையாமல், கடலுக்குள் போய் சேருவது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இது பொதுப்படையான பிரச்சனை, நானோ தனிமனிதன், என்னால் என்ன செய்யமுடியும் என்று எண்ணாதீர்கள். “இராமருக்கு உதவிய அணில்” போல், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட முயற்சியும் நிலத்தின் நீர் மட்டத்தை உயர்த்த உதவும். இந்த திசையில் நம்மால் செய்யக்கூடியது தான் மழை நீர் சேகரிப்பு.
நகரமயமாக்குதல் (Urbanisation) காரணமாக பெருகி வரும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், சிமெண்ட் தரைகளும், மணல் – தரைகளை நம் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. 2 – 3 தலைமுறைகளுக்கு பிறகு, “மணல் தரையா? அப்படி என்றால் என்ன? , சிமெண்ட் இல்லாத தரைகளும் இருந்தனவா?” என்று பிள்ளைகள் கேட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படி மண்ணை மறந்ததன் விளைவு தான் நிலத்தடி நீர் மட்டம் குறையக் காரணம். வீடுகளில், கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை மண்ணை நோக்கி திசைதிருப்புவதும், மழைநீரை மீள்-பயன்பாட்டிற்கு ஏற்ப சுத்தம் செய்து சேகரிப்பதும் தான் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் குறிக்கோள்.
மழை நீரை சேமிப்பதால் மட்டும் நம் கடமை முடிந்து விடுவதில்லை. நீரை விரயம் செய்யாமல் இருப்பதும் நம் கடமையே. முன்பெல்லாம், காசை நீர் போல் செலவழிக்கிறார் என்று சொல்வார்கள். இப்பொழுதோ நீரை காசு குடுத்து வாங்கும் நிலமைக்கு வந்துவிட்டோம். அலட்சியத்தினால் தான் இத்தகைய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது என் கருத்து. காசை செலவழிக்கும் பொழுது ஒன்றுக்கு இரெண்டு முறை “இது தேவையா, வீண் செலவா ?” என்று யோசிப்போம் ஆனால் நீரை விரயம் செய்கிறோமா என்று ஒரு முறையாவது யோசித்தது உண்டா?
குழாயை சரியாக மூடாமல், சொட்டு சொட்டாய் பல குடம் நீர் விரயமாகிறது. கை – கால் – முகம் கழுவ சில குவளை நீரே போதுமானது, முழு நேரமும் குழாயிலிருந்து நீரை ஓட விடுவதால் விரயமாவது 2 குடம் நீர். சமயலறையிலிருந்து வெளியேறும் நீரை தோட்டத்திற்க்கு திசை திருப்பாமல், குழாய் நீரை பயன்படுத்துவது விரயம் தானே. இதை தனி வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்பளிலும் சற்றே முன்யோசனையுடன் இருந்தால் செயல்படுத்தலாம்.
அரசாங்கம் உத்தரவு செய்தால் மட்டுமே தான் நாங்கள் இதையெல்லாம் செய்வோம், என்று விவாதம் செய்யாமல், ஒவ்வொரு குடியிருப்பிலும் நீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இனி பிறக்கப்போகும் சந்ததியினர் உங்களிடம் மானசீகமாய் கேட்கிறார்கள் என்று நினைத்து செயல்படுங்கள். இது நம் எல்லோருடைய தார்மீக கடமையும் கூட.

உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்

சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
நம்மில் எத்தனை பேருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று எனக்குத் தெரியாது, ஆனால், எல்லோருக்குமே (கடவுளின்) படைப்பின் மீது நம்பிக்கை உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். கதை, கவிதை, ஓவியம், நாடகம் போன்ற, மனிதர்கள் “படைக்கும்” விஷயங்களில், படைப்பு உருவாகுவதற்கு காரணமாய் இருக்கும் ஆரம்ப நிலையை Conception அதாவது கருக்கொள்ளுதல் என்று சொல்லுவோம். ஏன் தெரியுமா? கருக்கொள்ளுதல் என்பது (கடவுளின்) படைப்பின் ஆரம்ப நிலை. இந்த நிலை இல்லையென்றால் நீங்கள் இல்லை – நான் இல்லை – பிறகு என்ன இருந்தால் நமக்கென்ன?
சிசுவின் பிறப்பு என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
கருவின் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குவது இந்த stem cells தான். இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி “நாம்” உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே “சரியாகிறது”. சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் “ஒட்டிக்கொள்கிறது”.
ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு. (..Bone marrow வில் தான் Stem cells உற்பத்தியாகின்றன .. என்று சொன்னேனே.. நினைவிருக்கிறதா !!)
எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் (..அறுவை சிகிச்சை என்றாலே பலர் ஒதுங்கி விடுவார்கள்). இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.
சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.
Ø இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)
Ø தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogenic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
Ø இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்
இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, Osteoarthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.
சில Bone marrow donor’s இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.
ரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.
ü Private Cord Blood Bank :- கட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.
ü Public Cord Blood Bank :- இங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
உலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.

புத்தகத்தைப் படிப்பது மட்டும்தான் கல்வியா ?

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது போல், புத்தகங்களை படித்ததால் மட்டுமே ஒருவர் அறிவாளி ஆகிவிடமுடியாது. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படித்ததால் மட்டும் ” கல்வி ” பெற்று விட முடியாது. ” I have never let my schooling interfere with my education.” என்று Mark Twain சொன்னது எவ்வளவு பேருக்கு தெரியும். அப்படியே தெரிந்தாலும் நினைவில் வைத்திருப்பார்களா?. அனுபவங்களை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் சரி பார்க்கும் பட்டியல்)Check list) தான் படிப்பு. குறிப்பிட்ட அனுபவத்தின் முடிவில் மனதில் எழும் கேள்விகளும், அதற்காக பதிலை தேடும் முயற்சியும் தான் நிரந்தமான கல்வி என்பது என் கருத்து.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் “Practical Class” என்றொரு வகுப்பு உண்டு. அதாவது புத்தகத்தில் படித்ததை நடைமுறையில் செயல்படுத்தி பார்ப்பது. உதா: ஒளி்க்கதிர்கள் நேர்க்கொட்டில் செல்கிறது என்று படித்தால் மட்டும் புரிந்துவிடுமா? .. திரைச் சீலைகள் மூடிய அறையில் Torch அடித்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்குமே! காலப்போக்கில் இந்த “Practical Classes” நடைமுறை கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக ஏட்டுச்சுரைக்காயாய் மாறிப்போனது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக சண்டிகர் நகரத்தில் உள்ள “விவேக் மேல் நிலைப் பள்ளியில்” நடைமுறைக் கல்வியைச் சீராக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு 11 ஆம் வகுப்பைச் சார்ந்த சில மாணவர்களை ஒருங்கிணைத்து 8,000 ரூ. முதலீட்டில் InsPirated என்ற நிறுவனத்தை October 2008 இல் தொடங்கினார்கள். வர்த்தக துறையை (Commerce Dept) சேர்ந்த ஆசிரியர்கள் நிறுவனத்தை எப்படி நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகளையும் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் உள்ளது போல், இங்கும் நிர்வாகிகள் குழு (Board Of Directors), பணியாளர்கள் (Staff Members), கண்காணிப்பாளர் (Supervisor), மேற்பார்வையாளர் (Administrator), பொருளாளர் (Finance manager) என்று எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தை நடத்த தேவையான வேலையாட்களை பள்ளியில் படிக்கும் சக மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்தார்கள். இவர்களுக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட்டது உதா: 1-கிலோ குடமிளகாய் நறுக்க 2ரூ. உணவுப்பொருட்கள் தயாரிப்பது, புத்தங்களுக்கு அட்டை போடுவது (Book Binding), காகிதங்களைப் பயன்படுத்திப் பொருட்களை தயாரிப்பது (Paper products), Chalk தயாரிப்பது என்று பல வேலைகளை செய்தார்கள். பள்ளியில் வகுப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இவர்கள் வந்து “நிறுவனத்தின் வேலைகளை” கவனிப்பார்கள். அதே மாதிரி மாலையில் வகுப்பு முடிந்த பிறகு “நிறுவனத்தின் வேலைகளை” செய்வார்கள். இந்த கூட்டு முயற்சியின் பலனாக பலனாக லாபம் 11 மடங்கு அதிகரித்தாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றன.
இந்த பள்ளிக்கூடத்தில் நடைமுறை கல்வித்திட்டத்தின் கீழ் இம்மாதிரி மாணவர்களால் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. எல்லாமே கார்ப்பரேட் உலகை பிரதிபலிக்கும் விதம், பங்குதார்கள் (Shareholders), பங்காதாயம் (Dividend), சம்பளம் (Salary), ஒப்பந்த்ததில் வேலை செய்பவர்கள் (Contractors), லாப – நஷ்ட கணக்கு (Profit & Loss Accounts), சரக்குகளின் விவரங்கள் (Inventory), விலை விவரங்கள் (Invoice), செயல்பாட்டு அறிக்கை (Performance Reports) என்று எல்லாமே உண்டு. இது இவர்களுக்கு Hands–on–Experience ஐ தருகிறது. சரி, இப்படி மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனங்கள், இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் போழுது என்ன ஆகும்? நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் பணம் யாருக்கு – எப்படி சேரும்?.
குறிப்பிட்ட நிறுவனத்தை ஆரம்பிக்க முன்வரும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவில் (Board Of Directors) இடம் பெறுகிரார்கள். இந்நிறுவனத்தின் பங்குகளை 10ரூ என்ற விலைக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு / அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்கப்படுகிறது. உண்மையான பங்குச்சந்தையில் பங்குகளை allot செய்வதுபோல் தான் இதுவும். நிர்வாகிகள் குழுவில் இருக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வருடம், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு.. அதாவது liquidate செய்து, பணத்தை பங்குதார்களுக்கு முறையே கொடுத்துவிடுவார்கள். இதை பள்ளி கட்டாயப்படுத்துவதில்லை. இம்மாதிரி நிறுவனத்தை ஆரம்பிப்பதும், அதில் பங்குகொள்வதும், பங்குதார் ஆவதும்.. அவரவர் விருப்பம்.
இந்த திட்டத்தை கடந்த 13 வருடங்களாக விவேக் மேல் நிலைப் பள்ளி செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் HSBC மற்றும் KPMG போன்ற நிறுவங்களுக்கு சென்று presenstation கொடுத்துள்ளார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த JA-India (Junior Achievement India) வின் கீழ் அரசு அனுமதி பெற்றுள்ளது.
நம் தாத்தா – பாட்டி காலத்தில் 5 வது வரை படித்திருந்தால் போதுமானது. இங்கே சொல்லி, அங்கே சொல்லி எப்படியோ வேலை கிடைத்துவிடும். அப்பொழுதெல்லாம் “மெட்ரிக் பாஸ்” , அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே அறிவாளி என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நிலவும் காலத்தில் எவ்வளவு படித்தாலும் போதாது. Freshers களிடம் கொஞ்சமும் தயவு இல்லாமல் “அனுபவம் உண்டா” என்று நிர்வாகம் கேட்கிறது.
பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் இந்த JA-India ( Junior Achievement India ) திட்டத்தின் கீழ் .. அவரவர் நாட்டில் எப்படியோ அப்படி .. இம்மாதிரி செயல்களை மேற்கொண்டால், புத்தங்களில் மட்டும் படிப்பை பார்க்காமல், கல்வியின் அனுபவத்தை நன்றே அறிந்துகொள்ளலாமே.

செயற்கை விரலில் USB Drive

“மயூரி” என்று சொல்லும் பொழுது நம் எல்லோருடைய மனதிலும் “சுதா சந்திரன்” தான் சட்டென நினைவுக்கு வருவார். ஒரு திறமை மிக்க நாட்டிய கலைஞர், விபத்துக்குள்ளாகி தனது காலை இழக்க நேரிடுகிறது. பிறகு, ஜெயப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, நாட்டியம் பழகி திறமையை இன்னொரு முறை சமுதாயத்திற்கு நிரூபிக்கிறார். இது தான் ” மயூரியின் கதை”. கதை என்று ஈரெழுத்துக்களிற் சொன்னாலும், இது சுதாவின் வாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 1984 இல் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு தான், நம் சமுதாயத்தில் செயற்கை அங்கங்களைக் குறித்து விழிப்புணர்வு வளரத் தொடங்கியது.
சமுதாயம் ஊனமுற்றவர்களை பாவிகள் போல் பார்ப்பதும், இவர்கள் விதியே என்று மூலையில் முடங்கிக்கிடந்த காலமும் மாறிவிட்டது. எந்தப் பேதமும் இல்லாமல் அவர்கள் எல்லோருடனும், எப்பொழுதும்போல் பழகி வருகிறார்கள். நாமும் அவர்களிடம் வேறு விதமாக ( மனதைப் புண்படுத்தும் விதமாக) பழகுவதில்லை. மக்களிடையே கல்வி அறிவும், தொழில்நுட்பத்தால் இம்மாதிரி நண்பர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்ற புரிதலும் தான் இந்த மாற்றத்திற்குக் காரணம்.
சமுதாய மாற்றங்களும், மருத்துவத்துறையில் நிகழும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருக்க, ஃபின்லாண்டை (Finland) சேர்ந்த ஜெர்ரி ஜலாவா (Jerry Jalava) என்பவர் தனது மருத்துவருடன் கலந்தாலோசித்து (மோதிர) விரலில் USB Drive பொருத்தி உள்ளார். ஒரு நாள் இரவு வேலை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வரும் வழியில், சாலையைக் கடக்க ஓடி வந்த மானோடு மோதிவிட்டார். மோதிய அதிர்ச்சியில் இவரது தோள் பை (Backpack) பைக்கின் அடியில் மாட்டிக்கொண்டது. தோள் பையின் ஒருபக்கம் இவரது இடது தோளிலும், இன்னொரு பக்கம் மோட்டார்சைக்கிளிலும் சிக்கிக்கொண்டது. இதனால் தன்னை முழுவதுமாக மோட்டார்சைக்கிளிலிருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் கிட்டதட்ட 58 மீற்றர்கள் அதே நிலையில் சறுக்கி – உருண்டார்.
பிறகு தன்னை ஒருமாதிரி நிதானப்படுத்திக்கொண்டு புகைபிடிக்க சிகிரட்டை எடுக்க முயன்ற ஜெர்ரிக்கு வித்தியாசமான உணர்வு. விபத்தின் வலி ஒருபுறம், என்ன நடந்தது என்று புரியாத குழப்பம் இன்னொருபக்கம். “என்ன செய்வது என்று புரியாமல், அவ்வழியே வருபவர்களின் கவனத்தை ஈர்க்க சிறிது நேரம் அலறிக்கொண்டே இருந்தேன்” என்று ஜெர்ரி தனது வலைப்பதிவில் சொல்லுகிறார். இவர் அலறுவதைக் கேட்டு கரிசனம் காட்டிய நண்பர் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார்.
விபத்தால் உயிருக்கு எந்தச் சேதாரமும் இல்லை, ஆனால் இடது கையில் மோதிரவிரலில் பாதி சிதைந்துவிட்டது. எப்படி முயற்சித்தாலும் இவ்விரலைச் சரிசெய்ய முடியாது என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். சிதைந்த பாகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று ஜெர்ரியின் சம்மத்துடன் சிதைந்த பாகம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நடந்தது 07.05.2008 இல்.
தான் கணனித்துறையில் தொழிலாற்றுபவர் (Software Developer / Concept Designer) என்று சொன்ன பிறகு சிகிச்சை செய்த மருத்துவர், “அப்படியென்றால் உங்கள் விரலிலேயே “finger drive” (Thumb Drive என்று சொல்ல முடியாதல்லவா) பொருத்திக் கொள்ளுங்களேன் என்று வேடிக்கையாய்ச் சொன்னாராம். விஷயம் வேடிக்கையாய் ஆரம்பித்தாலும் ஜெர்ரி இதைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
எப்படியும் சிதைந்த பாகத்திற்குச் செயற்கை விரலை ஒட்டவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொப்பி மாதிரி பொருந்திக்கொள்ளுவது போல வடிவமைக்கப்பட்ட செயற்கை விரல்தான் சரியாக இருக்கும்.(.. அதாவது.. பட்டம் விடும் பொழுது நூல் – மாஞ்சா விரலை வெட்டாமல் இருக்க ரப்பராலான விரலை பொருத்திக்கொள்வோமே.. அது போல). வேடிக்கையாய் ஆரம்பித்த யோசனைக்கு வடிவம் குடுத்திருக்கிறார் ஜெர்ரி. இப்பொழுது, USB Flash Drive பொருத்திய விரலுடன் வலம் வருகிறார்.
இதில் Micro SD card மூலம் இவர் தேவையான கோப்புகளைச் சேமித்துக்கொள்கிறார். தற்பொழுது Billix , CouchDBX மற்றும் Ajatus அதில் நிறுவியிருக்கிறார். ” இந்த செயற்கை விரல் நிரந்தரமாக என் கையில் ஒட்டப்படவில்லை. நான் எப்பொழுது வேண்டுமானாலும் இதைக் கழற்றி வைக்க முடியும். என் Flash Drive ஐப் பயன்படுத்தும் பொழுது, அதை விரலிலிருந்து கழற்றி, கணனி / மடிக்கணனியில் மாட்டிவிடுவேன். வேலை முடிந்த பிறகு எடுத்து விரலில் மாட்டிக்கொள்வேன்” என்று ஜெர்ரி சொலுகிறார்.
விரல் துண்டிக்கப்பட்டது சங்கடமான நிகழ்வுதான் என்றாலும், அதையும் ஒரு நல்ல வாய்ப்பெனக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் ஜெர்ரி. Oppurtunity At The Face Of Adversity என்பதை இவருடைய finger – drive என்றும் நமக்கு நினைவுபடுத்தும்.